பெற்றெடுத்த
குழந்தை தன்னை பேணிடவே
தாயவள் தருவது தன்பாலே.
மற்றவை
எல்லாம் நோயைக் கொடுத்து
சேயதன் ஆயுளைக் குறைத்திடுமே.
கற்றவர்
எவரும் இச்சொல் மறுத்து
செப்பிட மனதில் துணிவுண்டா?
பெற்றோர்
எவரும் இதை மறுத்தால்
நக்கீரனாய் நான்
அதைமறுப்பேன்.
தமிழனாய்
பிறந்து தமிழனாய் வளர்ந்து
தாய்மொழி கல்வி புறக்கணிப்பா?
தமிழில்
பயின்றால் தரம்குறைந் திடுமா?
தள்ளாடும் பிறமொழி கல்விஏன்?
உமிழும்
எச்சில்கூட ‘தூ’எனும் ஓரெழுத்தால்
தூவானம் துளிர்ப்பது தமிழ்தானே.
நிமிரடா
தமிழா தலைகுனிந்து நீபதுங்கும்
நிலைஇனி வேண்டவே
வேண்டாம்.
தாய்ப்பால்
தன்னுடன் தமிழ் மொழியை
ஒப்பிட வந்தேன் இறுதியிலே.
சேய்தன்
நலத்தினை தாய்ப்பால் கூட்டிட
உடலும் மிளிரும் என்பதுபோல்
தாய்மொழிக்
கல்வி ஒன்றே நம்தம்
அறிவின் தரத்தை உயர்த்திடுமே.
பாய்மரக்
கப்பலாய் நமை கரைசேர்க்கும்
தமிழ்வழி கல்வியை தேர்ந்திடுவீர்.குறிப்பு: 04.02.16 - முறைசை தமிழ்ச் சங்கம் நூற்றாண்டு விழா-எழுச்சி கவியரங்கம்
No comments:
Post a Comment