பாரதிக்கு நேரென்றும் பாரதிதான்
எனச்சொன்னால்
பாரெங்கும் நம்பெருமை பரவிடுமே
எந்நாளும்
யாரென்ன சொன்னாலும் யாமறிந்த
கவிஞர்களில்
மாறாத புகழ்சேர்த்த மாமனிதன்
பாரதியே!
கவிதைகள் பலபுனைந்து கருத்துக்களைப்
புகுத்தியவர்
செவியளவில் தேன்சொரியும் செய்திகளைச்
சொல்லியவர்
அவிழாத முடிச்சுகளை அவிழ்த்துவிடத் தோன்றியவர்
புவியெங்கும் பாரதியின் புகழ்பரப்பும்
தமிழினமே!
வெள்ளையனை விரட்டிடவே வேலெடுக்க
எண்ணவில்லை
பள்ளியிலே பைந்தமிழைப் புறந்தல்லச்
சொல்லவில்லை
கிள்ளைமொழி தமிழ்மணத்தைக் கிளறிவிட்ட
பெருமகனார்
கள்ளவிழும் கவிதைகளால் கட்டிநம்மைக்
கவர்ந்தாரே!
மெட்டுக்கவி பலபுனைந்து மேன்மக்கள்
போற்றுகிற
சிட்டுக்கவி சிலவற்றால் சிறுவர்களை
யும்கவர்ந்தார்
கட்டுக்கதை எழுதாமல் கணிப்புடனே
கருத்துக்களை
சட்டெனத்தான் சொல்லிவைத்து சாதனைகள்
படைத்தாரே!
கடவுளெங்கும் இல்லையெனக் கைபிசையும்
கயவர்களை
மடையர்கள் என்றுரைத்த மாமனிதர்
பாரதியார்
தொடைநடுங்க வெள்ளையனைத் துணிவோடு
சாடியவர்
மடைதிறந்த வெள்ளமென மனமாறப் போற்றுவமே!
பெண்ணடிமை போற்றுபவர் பேடியெனச்
சொல்லிவைத்து
கண்ணியமாய் தன்வாழ்வில் கவிதைகளை
யேபடைத்து
எண்ணியதம் கருத்துக்களை இசைவோடு
எழுதியவர்
புண்ணியவான் பேரென்றும் புவியெங்கும்
வாழியவே!
No comments:
Post a Comment