தமிழ்மொழியென்
உயிரென்றே தாவுகின்ற தமிழா
தனித்தமிழில் பேசிடவும் தயங்குவது சரியா?
உமியென்று
கருதுகின்ற ஒதுக்கிவைத்த மொழியே
ஊடுகளை யாகிடவே உதவுவதும் இழிவே
உமிழ்கின்ற
எச்சிலென ஊரான்சொல் உனக்கே
உதவாது என்நாளும் உனைவருத்தும் பிணக்கே
தமிழால்நீ
வாழ்ந்தாலும் தனித்தமிழில் ஈர்ப்பே
தமிழ்த்தாயின் நிறைகாக்கும் தளராத காப்பே!
உலகமொழி
அத்தனைக்கும் உயர்வாகும் தமிழே
உருக்குலைக்க முயல்கின்றார் ஓயாது சிலரே
கலகமதை
உருவாக்கும் கயவர்களின் செயலால்
கன்னித்தமிழ்
இந்நாளில் கலங்குதடா புயலாய்
நிலவொன்று
முழுதானால் நீள்வானைப் புகழ்வோம்
நித்தம்நாம் தனித்தமிழின் நிறைகாத்து மகிழ்வோம்
தலப்பெருமை
காப்பதுநம் தனித்தமிழே என்றே
தளர்வின்றி அதைக்காக்க தாள்பணிதல் நன்றே!
சந்தனத்தை
அரைத்தாங்கு சரியளவில் அங்கும்
சங்களவு நறுமணமும் சேரமணம் பொங்கும்
தந்திரமாய்
நம்தமிழின் தனித்தன்மை கூட்டு
தப்பாது அதன்மகிமை தரணிக்கு காட்டு
மந்திரத்தால்
தமிழ்காக்கும் மாயவித்தை வேண்டாம்
மதிநுட்பத் தமிழொன்றே மணம்கூட்டும் சான்றாம்
இந்திரனே
வந்தாலும் இனிநாமும் ஒன்றே
இங்குதமிழ் நிறைகாத்து இன்புறலாம் நன்றே! [29.7.2018]
No comments:
Post a Comment