Tuesday, August 22, 2017

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் => 12.6.2017



நயத்தக்க நாகரிகம் நாடுபவர் யாரெனவே            
   நாலிருவர் மத்தியிலே நான்துணிந்து சொல்வேன்           
தயக்கமதைத் தள்ளிவைத்து தாள்பணிந்து நன்குணர்ந்து
   தக்கதொரு சொல்விளக்கம் தந்தெதையும் வெல்வேன்
மயக்கத்தி லேதுவண்டு மண்தரைமீ தேபுரண்டு
   மாற்றுமொழி சொல்பகரும் மாந்தரையும் பார்ப்பேன் 
வியப்பேதும் காட்டிடவோ வீண்மொழியும் கூட்டிடவோ
   விளங்குமொரு சொல்பகர்ந்து வித்தைவழி ஈர்ப்பேன்

நயமென்னும் சொல்லதனை நட்புயெனச் செப்புவதில்
   நம்பிவரும் மாந்தருடன் நட்புமழை கூடும்    
சுயமென்னும் சிந்தனையில் சுத்தநெறி நட்புறவும்
    சூசகமாய் தன்வழியில் சுற்றிவர நாடும்  
தயவேதும் பாராமல் தான்வெறுக்கும் நஞ்சினையும் 
    தட்டிடுமோர் எண்ணமின்றி தான்விரும்பி ஏற்பார்    
உயர்வான இக்கருத்தை ஊரறிய ஈரடியில் 
          உள்ளபடி வள்ளுவர்சொல் உண்மையெனப் பார்ப்பார்.

பிறர்நோக புண்படாமல் பிஞ்சுமனம் வாடிடாமல்
    பக்குவமாய் சொல்பகரும் பண்பெனவும் சொல்வார் 
அறமென்னும் நல்வழியில் அன்புமொழி தான்பகர்ந்து
    அங்குசமாய் நின்றுபிறர் அன்பினையும் வெல்வார்
புறமேதான் நேர்மையென்றும் பக்திநீதி நுட்பமென்றும்
    பொங்கிவரும் கோபமதை போக்குவதும் என்பார்
திறந்தாங்கே பொன்மனதால் தீயவழி செல்பவரை
    திக்கறியும் சொல்பகர்ந்து தேர்ந்தவழி காண்பார்
                    &&& 
குறிப்பு: 12.6.2017 அன்று நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளைக்கு அனுப்பபட்ட போட்டிக் கவிதை

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...