தமிழ்மொழியின் முகவரிநம் தமிழெழுத்தா - இல்லை
தடம்புரண்டு நமைவதைக்கும் கிரந்தெழுத்தா என்பேன்
அமிழ்தமெனும் தமிழ்ச்சொற்கள் ஆயிரமிங் குண்டு
அவைமறந்து கிரெந்தெழுத்து அரவணைப்பு மிங்கேன்?
உமியதனுள் ஓரரிசி உறங்குதெனச் சொல்லி
உதவாத உமிதன்னை உண்பதுவும் ஏனோ?
திமிருடனே நமக்கெதிராய் தீங்கிழைக்கும் வேளை
திடமான நடவடிக்கை திசைமாறல் தானோ?
இனிமையிலும் தெளிவதனை இயம்பிடுமின் சொற்கள்
எந்தமிழி லிருப்பதுவும் ஏராள மென்பேன்
தனிமையிலும் வலிமையுடன் தனித்தியங்கி
நாளும்
தன்மானம் காப்பதுவே தமிழ்மொழியின் பண்பே
துணிவுடனே கிரந்தெழுத்தின் தோழமையும் சேர்த்து
துன்பத்தை விலைபேசி தூக்கம்கெடல் தானோ?
கனிவின்றி இதழோரம் கருப்பொருளை மாற்றி
கன்னித்தமிழ் சொல்லதிலே கலப்படமு மேனோ?
தடையின்றி தண்ணீரில் தவழ்கின்ற பூவை
தடைசெய்து ஜலம்நீந்தும் புஷ்பமெனக் கூறி
இடையிடையே கஷ்டமென்றும் இஷ்டமென்றும் சொல்லி
இல்லத்தாள் திருமதியும் ஸ்ரீமதியாய் மாறி
உடைகழற்றும் நாகமொன்றை ஸர்ப்பமெனும் போது
அடிவயிறு கலங்குமொரு அவலநிலை தானாம்
விடைகொடடா அதையினிநீ விரும்புதலும் கேடே
விலகியந்த இழிநிலையும் விடுவதுதான் மேலாம்.
&&&
(கண்ணதாசன் நினைவுநாள்)
No comments:
Post a Comment