Sunday, August 20, 2017

தமிழ் எழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா?.......(1) =>(17.7.16)



தமிழெழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா? - இத்தலைப்பு
அமிழ்தமாய்ப் பட்டாலும் கன்னத்தில் அறைந்தாற்போல் இருக்கக் கண்டேன்.
எதைச் சொல்லி எடுத்துரைப்பேன் என்வாதம் எடுபடுமா என்றெண்ணி சற்று
பதைத்து விட்டாலும் சிந்தனை தெளிவுகண்டு சிறுகவிதை தொடுத்தேன் இங்கு.

துணையின்றி செயல்பட்டு பிறமொழியை ஓரம்கட்டி - எழுத்தால்
தனித்தன்மை கொண்டது தமிழென அறிவாய் தோழா.
அகரவரிசை தாண்டி லகரழகர மெல்லாம் வேறெந்த மொழியிலுண்டு? - இன்னும்
சிகரமாய் தண்ணீர், வெந்நீர், பன்னீரென ஓரெழுத்து வித்தை தமிழில்தான் உண்டு.
டண்ணகரத்தில் தண்ணீர் தன்னகரத்தில் வெந்நீர் றன்னரத்தில் பன்னீர் கண்டோம். .

தேனீர் என்று சொன்னால் தேள்வந்து கொட்டிடுமா? இதைமறந்து
நானிதோ துயிலெழுந்தேன் கொண்டுவா டீயை என்பதில் எதைக் கண்டீர்?
கடைக்குச் செல்கிறேன் என்று சொன்னால் கடைவாசல் திறக்காதா? - மெல்லச்சிறு 
நடையால் ஷாப்பிங் செல்கிறேன் என்றுரைத்து ஏற்றமென்ன கண்டீர்?

வேட்டியை வேஷ்டி என்று சொல்வது ஏனோ? அது என்விருப்பம் என்றால்
ஆட்டுக் குட்டியை ஆஷ்டு குட்டியெனச் சொல்வதும் தகுமா? எடுபடுமா?
டூட்T’ மறந்து லூட்T' அடித்தான் என்றெழுதி மகிழ்வது என்ன மொழியோ? போதும்
சேட்டைகள் கூட்டி வேட்டையாடி கொல்ல வேண்டாம் தமிழ் பிழைக்கட்டும்.

ஆழ்ந்து சிந்திப்பீர் அலைபாயும் ஐயம் தெளிவீர் தமிழதன் எழுத்தால்
வீழ்ந்து விடவில்லை விழித்தொருநாள் விடியலைக் காண்போம் திண்ணம் -ஆனால்
தமிழுக்கிணை தமிழேயென தம்பட்டம் அடித்து திரைமறைவில்
அமிழ்து மொழியை அரைகுறை மொழியாக்கும் அலங்கோல விளையாட்டு  
இனியும் வேண்டாம் எனக்கூறி எளியோன் விடைபெறுவேன்.  

குறிப்பு: இக்கவிதை முதன்முதலில்17.7.2016-ல் மணியம்மை மழலையர் பள்ளியில் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த "மாமதுரை கவிஞர் பேரவையில்" படைக்கப்பட்டது.

                                                                                                                                                                           

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...