தமிழ்மொழி முகவரி எதுவெனக் கேட்டால்
தனித்தமிழ் எழுத்தெனில் தமிழினி வாழும்
அமிழ்தெனும் தமிழ்மணம் அறிந்தவன் நீயோ
அதிலொரு கிரெந்தெழுத் தினையிடல் ஏனோ?
திமிருடன் கிரந்தெழுத் தினையுடன் சேர்த்து
திடமனம் இழந்திடும் திருப்பமும் கண்டாய்
உமியுனுள் அரிசியும் உறங்கிடு மென்றே
ஒதுக்கிடும் தகுதியில் உமிதனை உண்டாய்
இனிமையில் தனித்தமிழ் எழுத்துடன் சொற்கள்
இசைவுடன் குறையற இருப்பது உண்மை
தனிமையில் வலிமையும் தனக்கெனப்
பெற்று
தரமதை உயர்த்திடும் தமிழெழுத் தொன்றே
துணிவுடன் கிரந்தெழுத் தினையதில் சேர்த்து
துணையதைத் தழுவிடும் துயரமும் ஏனோ?
கனிவுடன் நிதமொரு கருப்பொருள் மாற்றி
கனித்தமிழ் வளமதில் கலப்படம் தானோ?
தடையிலும் நிறைகுளம் தவழ்ந்திடும் நீரின்
தகவினை மறந்துடன் ஜலமெனக் கூறி
இடையினி லியல்பினை ஸகஜமென் றோதி
இழிவுடன் திருமதி ஸிரீயென மாற்றி
படையது நடுங்கிடும் விடமிகு பாம்பின்
பெயரினில் கிரந்தெழுத் தினையிடல் வேண்டாம்
விடைகொடு அதையினி விரும்பிடல் கேடே
விரைந்தொரு இழிநிலை விடுவது மேலாம். &&&
25.6.2017 (கண்ணதாசன் நினைவுநாள்)
No comments:
Post a Comment