தமிழுக்கு
அமுதென்று பேரென்பார் - நானோ
தன்சுவையில் செங்கரும்புச் சாரென்பேன்
தமிழெங்கள்
உயிருக்கு நேரென்பார் - நானோ
தனிமைக்கு துணையாகும் தாயென்பேன்
அமிழ்தத்தை
மிஞ்சுகிற மொழியென்பார் - நானோ
அறியாமை அகற்றுமொரு ஒளியென்பேன்
குமிழுக்குள்
ஒளிர்கின்ற ஒளியென்பார் - நானோ
குறுநகையில் புன்முறுவல்
சிலையென்பேன்
முத்தினை வெல்லும் மொழியென்பார் - நானோ
முத்துக்குள் ஒளிரும்
மணியென்பேன்
தித்திக்கும்
தேன்சுவை மொழியென்பார் - நானோ
திகட்டாத தெள்ளமுது
சுவையென்பேன்
பத்தரை
மாற்று பொன்னென்பார் - நானோ
பகுத்தறிவு மானிடர்க்குப் புகழென்பேன்
சித்திரைத்
திங்களுடன் பிறப்பென்பார் - நானோ
சீராக ஆண்டெல்லாம்
சிறப்பென்பேன்
இத்தனை புகழுக்கும் தகுமென்பார் - நானோ
அத்துனை மொழிகட்கும்
மிகுமென்பேன்
தத்துவம்
நிறைந்ததொரு மொழியென்பார் - நானோ
சத்தியம் காக்கும்
விழியென்பேன்
பத்தினி
குணம்கொண்ட மொழியென்பார் - நானோ
பக்தர்கள் வியக்கும்
மொழியென்பேன்
வித்தகர்
போற்றும் மொழியென்பார் - நானோ
வித்துக்குள் வித்தான
மொழியென்பேன்
போற்றிப்
புகழ்ந்தது போதுமென்பார் - நானோ
போற்றி மகிழ்ந்தது போதாதென்பேன்
ஏற்றம்
இனிமேல் இல்லையென்பார் - நானோ
ஈனர்கள் வாய்மொழி தோற்குமென்பேன்
ஆற்றுப்
படுகை மணலென்பார் - நானோ
அருஞ்சுனை ஊற்றெடுக்கும் வயலென்பேன்
ஊற்றும்
ஒருநாள் ஓயுமென்பார் - நானோ
ஊரும் சேற்றிலும் மலருமென்பேன்
எண்ணிய சிறப்புகள் இவைதானா? - இல்லை
இன்னும் எத்தனையோ உண்டென்போம்
பின்னிய
இலக்கிய மொழியென்பார் - நாமோ
பிழைநீக்கும் இலக்கண மொழியென்போம்
அன்னிய
மொழிகளை வெல்லுமென்பார் – நாமோ
அத்தனை மொழிகளையும் ஆளுமென்போம்
நுண்ணிய
உயிருக்கு நேரென்பார் - நாமோ
நிலையற்ற உயிருக்கும் மேலென்போம்.
&&&
குறிப்பு: 20.04.2017 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் நிலா கவியரங்கம் -3 ல் படைக்கப்பட்டது
No comments:
Post a Comment