சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
நித்திரையும் உடற்பழக்கம் நிம்மதியும் மனப்பழக்கம்
சத்தியமாய் சொல்லிடுவேன் தத்துவமிங் கேதுமில்லை
இத்தரையில் கற்றதைநீ பகிர்ந்திடுவாய் தமிழெழுத்தால்.
இக்கருத்தை இத்தருணம் ஏன்படைக்க வேண்டுமன
அக்கறையில் வக்கிரமாய் கேள்விதனைத் தொடுத்தாலும்
சிக்கலென ஏதுமில்லை சிந்தனையில் பேதமில்லை
தக்கதொரு பதில்கொடுக்க கவியரங்கில் ஏறிவிட்டேன்.
எத்தனையோ மொழிகளைநீ கற்றவனே ஆனாலும்
புத்துணர்வு தனையளிக்கும் கற்பகமே உன்தமிழாம்.
சித்தமதில் கலங்கமின்றி உனதருமை தமிழேட்டில்
கத்திமுனை எழுதுகோள் தமிழ்நடனம் புரியட்டும்.
தெருவெங்கும் நீயுமொரு தமிழனென பறைசாற்றி
மறுநொடியில் தமிழேட்டில் வேற்றுமொழி நாட்டியமா?
கருவறுத்து உன்தமிழை காணாமல் செய்கின்றாய்
திரும்பவும் உன்பெருமை மீளாது எச்சரிக்கை.
அலைபுரளும் தமிழெழுத்தைப் பயன்படுத்துன் தமிழேட்டில்
தலைநிமிரும் உன்மானம் தானாக வரலாற்றில்
கலைமகளும் உனைநாட தமிழன்னை உன்நாவில்
நிலைகண்டு உன்புகழை உயர்த்திடவே நீகாண்பாய்.
குறிப்பு: 26.3.20 அன்று மாமதுரை கவிஞ்சர் பேரவைக் கவியரங்கில் பாடப்பட்டது.
No comments:
Post a Comment