எண்ணும் எழுத்தும் இணைந்து நம்மிரு
கண்கள் என்றான்
வள்ளுவனே.
கண்கள் இரண்டை படைத்த இறைவன்
காரணம் சொல்ல
மறந்தானே.
எண்கள் என்றால் கணக்கென்றும் அதில்
எழுத்தும் சேர்ந்தால்
மொழியென்றும்
கண்கள் வியக்க வள்ளுவன் அளித்த
பதிலால் என்மனம்
குளிர்ந்ததுவே.
கண்கள் இரண்டில் ஒன்றை இழந்தால்
பார்வை சற்று மாறிடுமே.
எண்கள் படைக்கும் நூலென தமிழில்
சோதிட கணிதம் ஒன்றாகும்.
எண்ணிப் பார்த்து காலம் கணிப்பது
ஐந்திறன் என்னும்
திருக்கணிதம்.
மண்ணில் காணும் கழனி அளப்பது
காணி குண்டு சங்கிலியாம்.
எழுத்தில் பிறப்பது தமிழெனில் எழுத்தின்
ஒலியை அளப்பது இலக்கணமே.
ஒழுக்கம் நிறைந்த இலக்கண கணிப்பால்
இலக்கியம் வளர்வது மெய்யன்றோ?
அழுத்தம் மிகுந்த கவிதை நடையில்
இலக்கியப் படைப்புகள் ஏராளம்.
பழுத்த கனியென எண்ணும் எழுத்தும்
தமிழின் கண்கள் சரிதானே?
குறிப்பு: 29.1.17 அன்று மாமதுரை கவிஞர் பேரவையின் திருவள்ளுவர் தின விழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment