Sunday, August 20, 2017

தமிழ்காக்கும் தகுந்தவழி...(28.8.2016)



தமிழ்காக்கும் தகுந்தவழி என்னவோவென என்றெண்ணிப் பார்த்தேன்
அமிழ்தொத்த தலைப்புக்கு விடைதேடி அலைந்து ஓய்ந்தேன் - பொன்னிற
உமிக்குள் ஒளிந்திருக்கும் நெல்லரிசி மணிக்கொப்ப
தமிழன்னை தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் மந்திரம் தேடினேன்.

வள்ளுவனையும் கம்பனையும் அரசியலில் கலந்தாய் தமிழா  
தெள்ளுதமிழ் காத்திட என்ன செய்தாய் தமிழா? சுயவிளம்பரமாய்
நம்மொழி செம்மொழியென வாய்கிழியப் பேசி - நாளும்
செம்மொழி காக்கநீ என்ன செய்தாய் சிந்தித்துப்பார் தமிழா.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி
செருக்குடன் பிறமொழிக்கு தடம்புரளும் மோகம் வேண்டாம் - எதிலும்
தருக்கம் வேண்டாம் தமிழ்மணம் குறைக்கவும் வேண்டாம்
நெருக்கம் கூட்டி நேர்மையுடன் தமிழ்காக்க சூழுரைப்பீர்.

உண்மைத் தமிழனாய் தமிழில் மட்டுமே பேசலாம்
கண்ணிமைக்கு கருமைதீட்டி பெண்மைக்கு அழகூட்டும்
வண்ணம்போல் எளியநடை கவிதைகள் படைக்கலாம்
எண்ணிப்பார் தனித்தமிழ் பேச்சும் கவியும் தமிழ்காக்கும் வழியன்றோ!

கலப்புமொழி பேசியினி கன்னித்தமிழை மறக்க வேண்டாம்
குழப்புமொழி களமேற்றி குறுநடை தொடர வேண்டாம்
பிழைப்புக்காகப் பிழைமறைத்து பித்தனாய் அலைய வேண்டாம்
அழைப்பிதழ் இருந்தாலும் அன்னியமொழி போற்ற வேண்டாம்.

தமிழனாய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்
தமிழால் நான்வாழ்வேன் தமிழுக்காகவே வாழ்வேனென  
நாளும்நாம் நற்றமிழ்சொற் சுவைகள்பல பெருக்க வாரீர்     
தோளுயர்த்தி தொன்மைமொழி காப்போம் வாரீர்.

குறிப்பு: 28.8.2016 - அன்று  மாமதுரை கவிஞர் பேரவையின்  எழுச்சி கவி அரங்கத்தில் படைக்கப்பட்ட கவிதை

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...