Tuesday, January 15, 2019

நீதி வழுவா நெறிமுறையில்


நாடுபோற போக்கினிலே நல்லவர்கள் யாருமில்லை            
    நல்லவர்கள் இல்லையெனில் நட்புகொள்ளும் பேருமில்லை        
பீடுநடை போடுகின்ற பிள்ளைகளும் மாறவில்லை          
    பிள்ளைகளால் தாயுணர்வில் பெற்றமனம் ஆறவில்லை           
பாடுபடும் மானிடர்க்கு பட்டதுயர் தான்நிறையும்          
    பற்றுவைத்த செல்வமெலாம் பத்துநாளி லேமறையும்       
நீடுபுகழ் நேர்வழியும் நீதிவழு வாநெறியும்   
    நீயுறையும் பூமியிலே நீங்கிவிட்ட தேமிகவே!!
                                                           
இங்கிதற்கோர் தீர்வினையும் ஈந்திடுமோர் ஆட்சியில்லை              
    இன்னலெலாம் போக்கிநலம் ஈட்டுகிற மாட்சியில்லை       
சங்கறுப்ப தெம்குலமே சங்கரனார்க் கேதுகுலம்           
   சாதியினைத் தூண்டுமிந்த சங்கதியால் ஏதுநலம்?
எங்களுக்கும் காலமுண்டு என்றுசொல்லும் நாள்வருமா?   
    இந்தவழி நல்லவழி என்றுரைக்க நாவருமா?
சுங்கவரிச் சாவடியில் சோதிக்கும் சோதனையாய்  
   சுட்டெரிக்கும் சட்டமதை சுற்றிவிட்டால் வேதனையே!  

இங்கிதமாய் நீதிநெறி ஏடுகளைத் தேடுகிறேன்       
   எந்தவழி யாயினுமோர் ஏற்றமதை நாடுகிறேன் 
மங்கிடாத வெண்நிலவில் மானிடராய் பூத்திருப்போம்      
   மன்னவராய் இவ்வுலகில் மாசறுத்து காத்திருப்போம் 
திங்களொரு நீதிவழி தீர்க்கமிகு சூத்திரமாய்         
    தின்னமுடன் எம்நலத்தைத் தேற்றுவதும் சாத்தியமே! 
பங்கமிலா நீதிவழி பாமரனும் சாற்றிடுவான்          
   பாங்குடனே நாமதையும் பந்தமுடன் போற்றுவமே!!

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...