Tuesday, January 15, 2019

உயிரும் மெய்யும் தமிழென்போம்


உயிரும் மெய்யும் தமிழென்றே
   உரக்கச் சொல்லும் கவியரங்கம்
குயிலும் மயிலும் ஒன்றாக
   கூடிப் பாடும் பயிலரங்கம்
செயலில் சொல்லில் தமிழ்போற்றி
    சிறகடித் தாடும் தமிழரங்கில்
அயலான் மொழிபல அறிந்தாலும்
     அம்மொழி வேண்டாம் இவ்வரங்கில்!

தமிழில் புனையும் கவிதைகளில்
   தனிச்சுவை உண்டென கண்டிடலாம் 
கமழும் மணமும் கண்டவர்கள்
   கண்முன் அதையும் விண்டிடலாம்
உமிழும் எச்சிலாய் நம்மிடையே
    உதவா மொழிகள் ஏராளம்
உமக்கே சொல்வேன் உரிமையுடன்
   உதறித் தள்ளுக பாராமல்!

திக்கெட் டினிலே நம்தமிழில்
   திருட்டு மொழிகள் நடமாட்டம்
அக்கம் பக்கம் பார்த்தால்நாம்
   அவற்றை நம்மிடை விடமாட்டோம்
தக்கத் திமியெனும் தாளத்தில்
    தரித்திரம் சேர்க்கும் மொழியெதற்கு?
கற்கண் டென்றோர் தனித்தமிழில் 
     கலப்படம் செய்யும் பழியெதற்கு? 

பயிலும் பாடம் தமிழென்றால்
   பாரில் புகழ்பல பெற்றிடலாம்
துயிலில் கனவில் தமிழென்றால்
   தொடரும் வெற்றிகள் தொட்டிலாம் 
அயலான் மொழியை அறுத்தெறிந்தால்
   அருமைத் தமிழைக் காத்திடலாம்
புயலாய் இன்றே புறப்படுவோம்
    பூமியில் நம்கொடி நாட்டிடலாம்.

கங்கை யமுனை காவிரிபோல்
     கடந்தே உலகில் நந்தமிழை
செங்கோல் பாண்டியன் சேரசோழர்
     செப்பிய முறையில் செந்தமிழை
மங்காப் புகழின் உச்சியிலே
     மடியில் தவழ்ந்தே மலரட்டும்
எங்கும் தமிழ்மொழி ஒன்றெனவே
     ஏற்றம் கண்டே வளரட்டும்.

16.12.2018

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...